×

ஆதீனத்தை மிரட்டிய வழக்கில் கைதான பாஜ நிர்வாகி மயிலாடுதுறை கோர்ட்டில் இன்று ஆஜர்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனம் மீது அவதூறு பரப்பும் வகையில் ஆடியோ, வீடியோ வெளியிடுவதாக கூறி பணம் கேட்டு சிலர் மிரட்டல் விடுப்பதாக ஆதீனத்தின் சகோதரர் விருத்தகிரி மயிலாடுதுறை போலீசில் கடந்த மாதம் 25ம் தேதி புகார் செய்தார். அதன்பேரில் மயிலாடுதுறை போலீசார் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.இதுதொடர்பாக ஆடுதுறை வினோத், சம்பா கட்டளை விக்னேஷ், செம்பனார்கோவில் தனியார் பள்ளி தாளாளர் குடியரசு, நெய்குப்பை நிவாஸ் ஆகிய 4 பேரை கடந்த 28ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் மயிலாடுதுறை மாவட்ட பாஜ தலைவர் அகோரம், ஆதீன நேர்முக உதவியாளர் செந்தில், திருக்கடையூர் விஜயகுமார், செய்யாறு வக்கீல் ஜெயச்சந்திரன், போட்டோ கிராபர் பிரபாகரன் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையே இந்த வழக்கில் திருக்கடையூர் விஜயகுமாருக்கு தொடர்பில்லை என்று மயிலாடுதுறை போலீசில் விருத்தகிரி கடிதம் கொடுத்தார். இதையடுத்து மற்றவர்களை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

இதனிடையே முன்ஜாமீன் கோரி பாஜ மாவட்ட தலைவர் அகோரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் அகோரம் மும்பையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் தனிப்படை போலீசார் அங்கு சென்று ராய்காட் மாவட்டம் அலிபாக் நகரில் உள்ள நாகா பீச்சில் நின்றிருந்த அகோரத்தை சுற்றிவளைத்து நேற்று கைது செய்தனர். பின்னர் அலிபாக் நீதின்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு அவரை மயிலாடுதுறைக்கு போலீசார் அழைத்து வருகின்றனர். இன்று பிற்பகல் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் அகோரத்தை போலீசார் ஆஜர்படுத்த உள்ளனர்.

The post ஆதீனத்தை மிரட்டிய வழக்கில் கைதான பாஜ நிர்வாகி மயிலாடுதுறை கோர்ட்டில் இன்று ஆஜர் appeared first on Dinakaran.

Tags : BJP ,Adeena ,Mayiladuthurai court ,Mayiladuthurai ,Vridthakiri ,Atheenam ,Darumapuram ,Mayladuthurai ,Dinakaran ,
× RELATED ஆதீனத்துக்கு மிரட்டல் விடுத்த...